சேவை வரி அதிகரிப்பால் ஏ.சி. ரயில் கட்டணம் உயர்கிறது

சேவை வரி அதிகரிப்பால் ஏ.சி. ரயில் கட்டணம் உயர்கிறது
Updated on
1 min read

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சேவை வரி உயர்வு அமலுக்கு வருவதால், ஏ.சி. வகுப்புகளுக்கான ரயில் கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் உயருகிறது.

ரயில்களில் ஏ.சி. வகுப்பு கட்டணத்துக்கான சேவை வரி 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை வரி உயர்வை ஜூன் 1–ம் தேதி முதல் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் ரயில்களில் குளிர்சாதன வசதியுள்ள ஏ.சி. சேர் கார், ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்புகளுக்கான கட்டணம் அதிகரிக்கிறது. 2 சதவீதத்துக்கும் குறைவாகவே (1.64%) சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெரிய அளவில் கட்டண உயர்வு இருக்காது. டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்ப ரூ.1,000–க்கு ரூ.16 என்ற அளவில் கட்டண உயர்வு இருக்கும்.

சரக்குக் கட்டணமும் ஜூன் 1 முதல் 0.5% அதிகரிக்கப்படுகிறது.

சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் கிடையாது என்று தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in