Published : 01 May 2015 07:38 AM
Last Updated : 01 May 2015 07:38 AM
பெங்களூருவில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. சாலையில் மழை நீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட பல் வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழைக்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் சேதமடைந்ததால் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கர்நாடகத்தில் விடிய விடிய கன மழை பெய்தது. தென் கன்னட மாவட்டத்தில் 70 மி.மீட்டரும் , தார்வாடில் 50 மி.மீட்டரும், சிக்பளாப்பூரில் 30 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 4-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அல்சூர், சிவாஜி நகர், காக்ஸ் டவுன், லிங்கராஜபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சிவாஜிநகர் பகுதியில் இருந்த 3 பழைய வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாந்திநகர், சிவாஜிநகர், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சாலையை கடக்க முயன்ற கார்களும், இரு சக்கர வாகனங்களும் பாதிக்கு மேல் நீரில் மூழ்கின. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதனிடையே பெங்களூரு வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும், ஆலங்கட்டி மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT