Published : 02 May 2014 09:10 AM
Last Updated : 02 May 2014 09:10 AM
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் (67) மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என அவரது மகன் ஜெய்வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள ஜெய்வர்தன் கூறுகையில், "எனது தந்தை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட விவகாரம். இதுதொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், எனது தந்தைக்கு முழு ஆதரவு உண்டு" என்றார்.
தனக்கும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அமிருதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக திக்விஜய் சிங் டுவிட்டரில் புதன்கிழமை தெரிவித்திருந்தார். அமிருதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டிருப்பதாகவும், அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திக்விஜய் சிங் கூறியிருந்தார். அமெரிக்காவில் படித்த ஜெய்வர்தன், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரகோகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில்தான் திக்விஜய் சிங் கடந்த 1977-ம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் கருத்து
இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.- பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT