Published : 29 May 2015 04:41 PM
Last Updated : 29 May 2015 04:41 PM
மத்திய அரசின் கொள்கைகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதாக ஏபிஎஸ்சி என்ற மாணவர் அமைப்புக்கு ஐ.ஐ.டி. சென்னை தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய மாணவர் யூனியன் புதுடெல்லியில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்களும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஏபிஎஸ்சி மாணவர் அமைப்பின் மீதான தடை உத்தரவை திரும்பப் பெற இவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் தடையைத் தாண்டி ஆர்பாட்டக்காரர்கள் செல்ல நினைத்த போது போலீசார் சிலரைத் தடுத்து கைது செய்தனர்.
முன்னதாக, அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை சென்னை ஐ.ஐ.டி.யின் ஒரு பிரிவு மாணவர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பு மீது அண்மையில் பெயர் குறிப்பிடாத சிலர் புகார் தெரிவித்தனர்.
அந்த புகார் மடலில், "ஏபிஎஸ்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடிக்கும், இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதியன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூவிடம் இருந்து சென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இத்தகைய சூழலில்தான், புகார் கடிதத்தையும், மத்திய அரசு விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்தையும் சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT