Published : 20 May 2014 03:36 PM
Last Updated : 20 May 2014 03:36 PM

மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு

பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியை, ஆட்சிய மைக்க வருமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார். இதையடுத்து நாட்டின் 14-வது பிரதமராக மே 26-ம் தேதி பதவியேற்கிறார் மோடி.

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அழைப்பு ஏற்று, அவரை நேரில் சந்தித்தார் மோடி. பிற்பகல் சுமார் 3 மணிக்கு ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற மோடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்றார். மோடி அளித்த பூங்கொத்தை பெற்றுக் கொண்ட முகர்ஜி, அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சுமார் 15 நிமிடம் நீடித்த சந்திப்பில், மத்தியில் புதிய அரசு அமைக்குமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார் பிரணாப். மேலும் இது தொடர்பான அதிகார பூர்வ உத்தரவையும் அளித்தார்.

இதை மிகவும் பெருமையுடன் கையில் ஏந்திவந்த மோடி, தமக்காக காத்திருந்த செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது மோடி கூறுகையில், “குடியரசுத் தலை வரை சந்திப்பதற்காக வந்தேன். எனது தலைமையில் ஆட்சி அமைக்க, அவர் அதிகாரபூர்வ உத்தரவை தந்துள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு இதே மாளிகையில் நடைபெறும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். இதில் பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி, வெங்கய்ய நாயுடு, கோபிநாத் முண்டே, பஞ்சாப் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பீர்சிங் பாதல், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தியின் ராம்விலாஸ் பாஸ்வான், நாகா மக்கள் முன்னணியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான ரியோ ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் பாஜக நாடாளுமன்ற கட்சியின் தலைவராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டதை குடியரசுத் தலைவரிடம் முறைப்படி தெரிவித் தனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் அளித் தனர். புதிய அரசு அமைக்க மோடிக்கு அழைப்பு விடுக்கு மாறும் கேட்டுக்கொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை வாயிலில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், “பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில், நரேந்திர மோடியை தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதன்படி மோடியை பதவி யேற்க அழைக்கும்படி குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x