Published : 24 May 2015 10:29 AM
Last Updated : 24 May 2015 10:29 AM
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தக்க ஆதாரங்களுடனும், உரிய ஆவணங்களுடனும் வலுவாகக் கட்டமைத்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தான்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஐஜி லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அப்போது ஜெயலலிதா, ‘இவ் வழக்கை தனி நபரான லத்திகா சரண் விசாரிக்கக் கூடாது' என கோரியதைத் தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசார ணைக்கு ஏற்றது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணையை தொடங்கி ஜெய லலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி மீது முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்தார்.
சூத்திரதாரி நல்லம்ம நாயுடு
ஜெயலலிதா வழக்கினை வடிவ மைத்த முக்கிய சூத்திரதாரி நல்லம்ம நாயுடு தான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், சுமார் 11 ஆண்டுகள் இவ்வழக்கை நடத்தினார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி. நல்லம்ம நாயுடுவின் கீழ் 16 காவல் ஆய் வாளர்கள் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் விசார ணையில் இறங்கினர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு களை முடக்கி, தமிழகம் முழுவது முள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை இந்த குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 7.12.1996 அன்று ஜெயலலிதாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அடுத்த கணமே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நுழைந்த நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் 12.12.1996 அன்று மாலை வரை சோதனையிட்டனர்
கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகை கள், ஆயிரக்கணக்கான சேலை களில் தொடங்கி செருப்புகள் வரை அனைத்தையும் அள்ளினர். வழக்கு தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான், தோட்டாதரணி, கங்கை அமரன், ராம்குமார் உட்பட 1,086 பேரிடம் விசாரித்து அதில் 259 பேரை அரசு தரப்பு சாட்சிகளாக சேர்த்தார் நல்லம்ம நாயுடு.
ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க சென்னை சிங்கார வேலர் மாளிகையில் சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க 17,500 பக்க கோப்புகளையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சவுந்திர ராஜன் விசாரணை அதி காரியாக செயல்பட்டார். விசாரணை அதிகாரியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டதால் வழக்கு 2003-ல் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, ஓய்வு பெற்ற நிலையில் வீட்டில் இருந்த நல்லம்ம நாயுடு மறு அமர்த்தல் செய்யப்பட்டார்.
நல்லம்ம நாயுடு நாள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருவார். 2011-ல் திமுக ஆட்சி முடிந்து, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நல்லம்ம நாயுடு விலகினார்.
18 ஆண்டுகால சம்பந்தம்
இவ்வழக்கில் அதிக அனுபவம் உள்ளவர் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.எஸ்.பி. சம்பந்தம். இவ்வழக்கின் விசாரணை அதிகாரி யாக நியமிக்கப்பட்டதில் இருந்து தீர்ப்பு வெளியான நாள் வரை ஒரு நாள் விடாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜரானார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறும் போது அதிகாரிகள் மாற்றப்பட்டு வந்த நிலையில் மாறாத ஒரே அதிகாரி சம்பந்தம்.
ஜெயலலிதா வழக்கில் 18 ஆண்டுகளாக இடைவிடாமல் பணி யாற்றினார். வழக்கு தொடர்பான அனைத்தையும் தினமும் தனது டைரியில் பதிவு செய்வது சம்பந்தத் தின் வழக்கம்.
ஏறக்குறைய 45 டைரிகளை எழுதி முடித்துள்ள சம்பந்தத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் தாக்கியது. எனினும் வழக்கின் தன்மையை கருதி நடுங்கிக் கொண்டே நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரியான சம்பந்தம் ஒரு கட்டத்தில் குற்றவாளிகள் தரப்பின் 99-வது சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்தார். இதை வலுவாக பிடித்துக் கொண்டே வழக்கில் மூன்றாம் தரப்பாக திமுக நுழைந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை காலத்தில் முன்னுரை எழுதியதில் தொடங்கி கடந்த 11-ம் தேதி முடிவுரை எழுதப்பட்டது வரை அனைத்து அம்சங்களும் அறிந்த சம்பந்தம், விரைவில் நூல் ஒன்றை எழுத இருக்கிறார்.
வழக்கை முடித்த குணசீலன்
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜியாக இருந்த குணசீலன் 2011-ல் சொத்துக்குவிப்பு வழக் கின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிய 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் அதிமுக ஆட்சியில் மீண்டும் பணி அமர்த்தல் மூலமாக இவ்வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப் பட்டார். கடந்த 4 வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எங்கு பயணித் தாலும் அங்கு முதல் ஆளாக இருப்பார். அன்றாட விசாரணையை மிக கவனமாக குறிப்பெடுக்கும் குணசீலன் விசாரணையின் போக்கை துல்லியமாக கணிப்பார்.
கியூ பிரிவு போலீஸில் பணி யாற்றிய அனுபவம் உள்ளதால் நீதிமன்றத்தின் அன்றாட செயல் பாட்டை மிக நுட்பமாக பதிவு செய்து மேலிடத்துக்கு தகவல் சொல்லுவார். அதிலும் குறிப்பாக மேல்முறையீட்டில் நீதிபதி குமார சாமியின் அணுகுமுறையில் ஆரம் பித்து, பவானிசிங் ஏற்படுத்திய பிரச்சி னைகள் வரை அனைத்தையும் முன்னின்று தீர்த்து வைத்தார்.
ஒருவேளை பவானிசிங்கை குணசீலன் சரியாக கையாளாமல் விட்டு இருந்தால், மேல்முறையீட்டு விசாரணை இன்னும் முடிந்திருக்காது என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சொல்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்த முக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்
1.வி.சி.பெருமாள் (1996 ஒரு மாதம் மட்டும்)
2.நல்லம்ம நாயுடு, சம்பந்தம் உள்ளிட்ட குழுவினர் (1996 முதல் 2001 வரை)
3.சவுந்திர ராஜன் மற்றும் குழுவினர் (2001 முதல் 2006 வரை)
4.நல்லம்ம நாயுடு, துக்கை யாண்டி (2006 முதல் 2011 வரை)
5. குணசீலன், சம்பந்தம் (உதவியாளர்கள்: மோகன், ராம சந்திர மூர்த்தி) (2011 முதல் தற்போது வரை)
(இன்னும் வருவார்கள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT