

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து அளித்த கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை, கர்நாடக மாநில சட்டத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜெயலலிதா 5-வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுள்ள நிலையில், கர்நாடக சட்டத்துறையினர் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சட்டத்துறையினர் அறிக்கை அளித்த பிறகு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
“எங்கள் மாநில சட்டத்துறையினர் கர்நாடகா உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுதும் ஆராய்ந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து அறிக்கை வந்த பிறகே முடிவெடுப்போம்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் இது குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு, “இல்லை. கட்சியின் மேலிடம் மாநில விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது” என்றார்.