

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும் பணிகள் முடிந்து விட்டதால், தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என தகவல் வெளி யாகியுள்ளது.
இதனால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், நூற்றுக் கும் மேற்பட்ட தொண்டர்களும், மத்திய மாநில உளவுத்துறை அதி காரிகளும், பத்திரிகையாளர்களும் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், “பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என அதிரடி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது
உச்ச நீதிமன்றத்தின் உத்தர வைத் தொடர்ந்து நீதிபதி குமார சாமி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம் பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.
சொத்து விவரங்களை கணக்கிட ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர் கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.
தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய் வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தர விட்டார். தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங் களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கி ருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.
மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப் படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்தார்.
தொடர்ந்த வதந்திகள்
தீர்ப்பு எழுதும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறது, நாளை வெளியாகிறது என அவ்வப் போது வதந்திகள் கிளம்பின.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெ வழக்கில் மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகும்' என பதிவிட்டு இருந்தார். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தனர். மேலும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தீர்ப்பு தேதி உறுதியாக அறிவிக்கப்படும் என வதந்தி பரவியதால் தமிழகத் தில் இருந்து ஜெயலலிதாதரப்பு வழக்கறிஞர்கள் குலசேகரன், பன் னீர்செல்வம், கருப்பையா ஆகி யோர் நீதிமன்ற பதிவாளர் அலு வலகத்தில் காத்திருந்தனர். இதேபோல அதிமுக முக்கிய நிர்வாகிகளும், பத்திரிகையாளர் களும் நீதிமன்றத்தில் குவிந்திருந் தனர். ஆனால் மாலை வரை காத் திருந்தும் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் தீர்ப்பு தேதி குறித்து எந்த அறிவிப் பையும் வெளியிடாததால் அனை வரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தீர்ப்பு தேதி குறித்து நீதிபதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, “கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடு முறை தொடங்கினாலும் ஜெய லலிதா வழக்கில் தீர்ப்பை எழுத வேண்டி இருப்பதால் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்களும் அவருடன் காலநேரம் பார்க்காமல் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளித்தனர். இதனால் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தது. இருப்பினும் நீதிபதி நேற்று முழுவதும் தீர்ப்பை சரிப்பார்க்கும் பணியில் கவன முடன் ஈடுப்பட்டார்.
தீர்ப்பு எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப் பதால் நீதிபதி குமாரசாமி வெள்ளிக் கிழமை காலை இது தொடர்பான தகவலை நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவிப்பார். அதனை தொடர்ந்து பதிவாளர் வெள்ளிக்கிழமை பிற் பகலில் தீர்ப்பு தேதியை முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அநேகமாக உச்ச நீதி மன்றத்தின் கால அவகாசம் முடிவ தற்குள் அதாவது மே 11-ம் தேதியோ அல்லது மே 12-ம் தேதியோ தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
இருப்பினும் தீர்ப்பு தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக நீதிமன்ற பதிவாளர் கர்நாடக அரசு டனும், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியுடனும் ஆலோசனை நடத்துவார். ஏனென் றால் தமிழகத்தில் இருந்து வரும் அதிமுகவினரை கட்டுப்படுத்து வது, போதிய பாதுகாப்பு வழங்கு வது, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவாதிக்கப் படும். அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.