Published : 17 May 2015 12:34 PM
Last Updated : 17 May 2015 12:34 PM

நிலம் தொடர்பான பிரச்சினையால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப் பட்டனர். 13 பேர் காய மடைந்தனர். ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இதுகுறித்து நகாவூர் மாவட்டம் மெர்டா நகர காவல் நிலைய அதிகாரி நாகாராம் கூறியதாவது:

தங்கவாஸ் கிராமத்தைச் சேர்ந்த ரத்ன ராம் மேக்வால் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு கானாராம் ஜாட் உரிமை கொண்டாடி வருகிறார். இதுதொடர்பாக இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடும் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சண்டையில் ரத்னா ராம், போகர் ராம் மற்றும் ராம்பால் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயம் காரணமாக அஜ்மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பஞ்சா ராம் என்பவரும் பலியானார். இதில் ராம்பால் மட்டும் துப்பாக்கி குண்டு பாய்ந்தும் மற்றவர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டதிலும் உயிரிழந்தனர்.

காயமடைந்த 13 பேர் அஜ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கர் ஜாட் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x