Last Updated : 02 May, 2015 03:15 PM

 

Published : 02 May 2015 03:15 PM
Last Updated : 02 May 2015 03:15 PM

இமாலயம்: அடுத்த பூகம்பம் சமீபத்திய மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பு

உலகின் பிரதான பூகம்ப பகுதியாகியுள்ள இமயமலைப் பகுதியில் அடுத்த பூகம்பம் தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய புவி-பௌதிக ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே.சத்தா இது பற்றி கூறும் போது, “எதிர்காலத்தில் இமாலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட்கால் அது ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்துக்கு மேற்காக ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார்.

எப்படி கூற முடிகிறது?

ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு பூகம்பம் ஒரே திசை பிளவினால் ஏற்பட்டது. நிலநடுக்க மையத்திலிருந்து நோக்கினால் அந்த ஃபால்ட் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏற்பட்டது. அதிலிருந்து பல பத்தாண்டுகளாக அடைந்து கிடந்த பயங்கர ஆற்றல் வெளிப்பட்டது.

மேற்குத்திசையிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு திசை பிளவு ஏற்பட்டதால் கிழக்கில் அடைந்து கிடந்த ஆற்றல் வெளியானது. ஆனால் மேற்குப் பகுதியில் அழுத்தம் ரிலீஸ் ஆகவில்லை.

ஒரு உதாரணம்:

2004, டிசம்பர் 24, தெற்காசிய நாடுகளில் பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்திய சுமத்திரா பூகம்பத்தின் போது தெற்கிலிருந்து வடக்கு முகமாக ஒரே திசையில் பெரும் பிளவு ஏற்பட்டது. இதனால் வடக்குப் பகுதியில் அடைந்து கிடந்த ஆற்றல் வெளியானது. இதனால் தெற்கில் சுமை அதிகரித்தது. அழுத்தம் கூடியது. இதனால் மார்ச் 28, 2005-ல் சுமத்ராவுக்கு தெற்கே 300 கிமீ தொலைவில் நியாஸ் தீவுகளில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால் இதில் இடப்பெயர்வு கிடைக்கோட்டு வசமாக ஆனதால் பெரிய விளைவுகள் ஏற்படவில்லை. மாறாக செங்குத்து இடப்பெயர்வு ஏற்பட்டிருந்தால் இன்னொரு பெரிய பூகம்பத்தையும் சுனாமியையும் சந்தித்திருப்போம். ஆகவே எந்த இடத்திலிருந்து தோன்றி எங்கு அதன் ஆற்றல் வெளியாகிறதோ, அது தோன்றிய இடத்தில் அழுத்தம் ஏற்பட்டு ஆற்றல் அங்கு சேமித்துக் கொள்ள தொடங்குகிறது.

“இந்த பூகம்பம் எற்படுத்திய இடப்பெயர்வு பற்றி இன்னமும் துல்லியமாக எதையும் கூற முடியவில்லை. ஆனால் 7.8 என்றால் ஃபால்ட்டினூடாக 1 அல்லது 2 மீட்டர்கள் இடப்பெயர்வு இருக்கும். மோதும் ஃபால்ட்டில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் மேல்நோக்கிய தள்ளல் இருக்கும் இதனால் இடப்பெயர்வு செங்குத்து மட்டத்தில் இருக்கும்” என்றார்.

இந்தத் தர்க்கத்தின் படியே தற்போது இமாலயத்தில் மேற்குப் பகுதியில் அழுத்தம் அதிகமாகியிருக்கலாம் இதனால் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அது மேற்குப் பகுதியாக இருக்கும் என்று கூறலாம். என்று கூறுகிறார் சத்தா.

கொலம்பியா ஆய்வாளர் கோலின் ஸ்டார்க் கூறும் போது, “நேபாள பூகம்பத்தினால் இந்தியா 1-10 அடிகள் வரை நேபாளத்துக்குக் கீழ் சென்றுள்ளது.

நேபாள பூகோளம்

பண்டைய கால ஏரிப்படுகையின் மீது தலைநகர் காத்மாண்டு நிலைகொண்டுள்ளது. எனவே இதன் மண் மிகவும் மென்மையானது. இதனால் வெகுவிரைவில் கரைந்து விடக்கூடியது. கடும் பாறைப்பகுதியாக இருந்திருந்தால் பூகம்ப ஆற்றல் அலைகள் மிகப்பெரிய வேகத்துடன் செல்லும். அதனால் விளைவுகள் இவ்வளவு மோசமாக இருக்காது. ஆனால் படிவுகள் கொண்ட மேற்புறமாக இருந்தால் பூகம்ப ஆற்றல் அலைகள் அதிகரிக்கவே செய்யும். இதனால் அப்பகுதியில் பூமி ஆடவே செய்யும். இரண்டு கண்டத் தட்டுக்கள் மோதிக்கொள்ளும் போது ஆழம் அதிகம் இல்லாத பூகம்பம் ஏற்படும்.

ஆனால் கடலைத் தாங்கும் தட்டுக்கள் இரண்டு ஒன்றை ஒன்று மோதும் போது இரண்டு பிளேட்களும் கீழே சென்று 'ட்ரென்ச்' உருவாகிறது. பசிபிக் பெருங்கடலில் உருவான மரியானா ட்ரென்ச் இத்தகையதே.

"கடலைத் தாங்கும் 2 கண்டத்தட்டுகளும் கீழேசெல்வதற்குக் காரணம் புவி ஈர்ப்பு விசையே. மாறாக இரண்டு கண்டத் தட்டுக்கள் மோதிக்கொள்ளும் போது புவி ஈர்ப்பு விசை இவ்வளவு தீவிரமாக இருக்காது.

கடலைத் தாங்கும் தட்டுக்கள், கண்டத்தை தாங்கும் தட்டுக்களுடன் மோதும் போது கடலைத் தாங்கும் தட்டுக்களின் கன அளவு காரணமாக கண்டத்தைத் தாங்கும் தட்டுக்கு அடியில் செல்லும்” என்று கூறுகிறார் சத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x