Last Updated : 05 May, 2015 11:02 AM

 

Published : 05 May 2015 11:02 AM
Last Updated : 05 May 2015 11:02 AM

பிரதமர் நரேந்திர மோடி மே 14-ல் சீனா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 14 முதல் 19-ம் தேதி வரை சீனா, மங்கோலியா, தென் கொரியா ஆகிய நாடுகளில் 6 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் சீனா போய் சேரும் அவர், மே 14 முதல் 16 வரை அந்நாட்டில் 3 நாள் பயணம் செய்கிறார். சீனாவின் பழமைவாய்ந்த சியான் நகரில் மோடி தனது பயணத்தை தொடங்குகிறார். இந்த நகரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த மாகாணமான ஷான்ஸ்கி மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தனது பயணத்தை தொடங்கினார். இதுபோல் மோடி இம்முறை தனது பயணத்தை சீன அதிபரின் சொந்த மாநிலத்தில் தொடங்கு கிறார். சியான் நகரில் பிரதமர் மோடிக்கு சீன அதிபர் விருந்து அளிக்கிறார்.

மறுநாள் தலைநகர் பெய்ஜிங் செல்லும் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் ஆகியோருடன் பேச்சு நடத்துகிறார். எல்லைப் பிரச்சினை, இந்தியா வில் சீனாவின் முதலீட்டை அதிகரிப்பது மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத் துவது குறித்து சீனத் தலைவர்களுடன் மோடி பேசுவார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன அதிபருடன் நிகழ்ச்சி ஒன்றில் மோடி பங்கேற்பார் எனத் தெரிகிறது.

மூன்றாவது நாளில் பிரதமர் மோடி ஷாங்காய் செல்கிறார். வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர் தனது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து விளக்குவார் எனத் தெரிகிறது. இதையடுத்து சீனாவில் உள்ள இந்தியர்களை மோடி சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி தனது சீனப் பயணத்தை 16-ம் தேதி முடித்துக்கொண்டு மறுநாள் மங்கோலியா செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் மங்கோலியா செல்வது இதுவே முதல்முறை. மே 18, 19 ஆகிய தேதிகளில் அவர் தென் கொரியாவில் பயணம் செய்கிறார். தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை உடன் சியோல் நகரில் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், முக்கிய தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x