

‘‘தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தீவிரவாதத்தால் பாகிஸ்தான் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழு அளவில் ஒத்துழைப்பும் உதவியும் அளிக்க வேண்டும்’’ என்றார்.
‘‘தீவிரவாதத்தை தீவிரவாதம் மூலமே வேரறுப்போம்’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சில நாட்களுக்கு முன்னர் ஆவேசமாகக் கூறினார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஸிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘அமைச்சர் பாரிக்கரின் பேச்சு தீவிரவாதத்தை இந்தியாவே தூண்டி விடுகிறது என்ற பாகிஸ்தானின் சந்தேகத்தை உறுதி செய்கிறது’’ என்று சர்தாஜ் கூறினார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, ‘‘தீவிரவாதத்தை தூண்டி விடுவது யார் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கே தெரியும்’’ என்றார். முன்னதாக ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா அதிகாரிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
போலி இந்திய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு தீவிரவாதத்தை தூண்டிவிட தொடர்ந்து முயற்சி நடக்கிறது. போலி கரன்சி நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த விஷயத்தில் வங்கிகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பு போல இருப்பவை வங்கிகள். சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை தேசியமயமாக்கும் மிகப் பெரிய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், வங்கிகளுக்கும் மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதில் குறை இருந்தது. இப்போது, ஜன்தன் திட்டத்தின் மூலம் 15 கோடி குடும்பங்களை வங்கி வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளோம். இது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக வங்கிகளை பாராட்டுகிறேன்.
சமூக பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். எங்களை விமர்சிப்பவர்கள், விரைவில் எங்கள் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலனை புரிந்து கொள்வார்கள். மோடியின் திட்டங்களை சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) பாராட்டி உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்தபட்சம் 10 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதால் இப்படித்தான் வாஜ்பாய் ஆட்சியின் போது, 10.4 சதவீதமாக உயர்ந்தது. கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளாலும், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.