

நாடு முழுதும் பி.எஸ்.என்.எல். சேவைகளின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதாக மக்களவையில் உறுப்பினர்கள் பலரும் கடும் குற்றம்சாட்டினர்.
பி.எஸ்.என்.எல்-ன் சேவைகள் நாடு முழுதும் மோசமாக உள்ளது பற்றி இன்று மக்களவையில் பாஜக உறுப்பினர் சஞ்சய் தோத்ரே கேள்வி எழுப்பும் போது, ”தங்களது சேவைகளை மேம்படுத்தும் எண்ணமே பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இல்லை, ஒரு வேளை இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சார்பாக மறைமுகமாக பணியாற்றுகின்றனரோ, தனியார் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை பரவலாக்க வழிவகை செய்கின்றனரோ” என்று கேட்க, எதிர்கட்சித் தரப்பிலிருந்து பலத்த கரகோஷம் எழுந்தது.
இதற்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தே பி.எஸ்.என்.எல் தனது சேவையில் சரிவடைந்துள்ளது. ஒரு சமயத்தில் ரூ.10,000 கோடி லாபம் ஈட்டி வந்த பி.எஸ்.என்.எல். தற்போது ரூ.8,000 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி வருகிறது" என்றார்.
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மோசமான சேவைகளை வழங்குவதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். உதவுகிறதோ என்ற பாஜக உறுப்பினரின் கேலியை ரவிசங்கர் பிரசாத் மறுதலித்தார்.
மற்றொரு பாஜக உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத், “நாடாளுமன்ற வளாகத்துக்குள் வழங்கும் வை-ஃபை மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் கூட திருப்திகரமாக இல்லை” என்றார்.
இதற்கு பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத், “பி.எஸ்.என்.எல். சேவைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.