Published : 15 May 2015 08:03 AM
Last Updated : 15 May 2015 08:03 AM

மாணிக்கக் கல் காணிக்கை விவகாரம்: திருப்பதி தேவஸ்தானம் மீது பக்தர் புகார்

திருமலை-திருப்பதி தேவஸ் தானத்துக்கு விலை மதிப்பு மிக்க மாணிக்கக் கல்லை காணிக்கையாக வழங்கிய தன் மீது, தேவஸ்தானம் மோசடி வழக்கு தொடர்ந்து அவமானப்படுத்தியதாக ஏழு மலையான் பக்தர் குற்றம்சாட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தன்னை அவமானப் படுத்திய தேவஸ்தான நிர் வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிர மாநிலம் விதர்பா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அந்த பக்தர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

நான்மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா பகுதியைச் சேர்ந்த வைர நகை வியாபாரி லிமாயே. திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.

கடந்த 21.5.1998-ம் தேதி விலை மதிப்பு மிக்க மாணிக்கக் கல்லை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கினேன். இதைப் பரிசோதித்த தேவஸ்தான அதிகாரிகள், போலி எனக்கூறி கடந்த 4.8.1998-ல் திருப்பிக் கொடுத்து விட்டனர்.

இதையடுத்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தினர் என் மீது மோசடி வழக்கு தொடர்ந்தனர். இதனால் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டு நகை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. 1225 கேரட் மதிப்புள்ள இந்த மாணிக்கக் கல், 5 செ.மீ. அகலமும், 4 செ.மீ. உயரமும் கொண்டது. இதன் எடை 225 கிராம்.

அதன் பிறகு அந்த மாணிக்கக் கல்லை பல நாடுகளில் விற்க முயற்சித்தேன். இப்போது அதை ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்க சர்வதேச வியாபாரி ஒருவர் முன் வந்துள்ளார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. முன் பணமும் கொடுத்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் 95 சதவீதத்தை ஏழை, எளியவர்களின் நலனுக்காக வழங்க உள்ளேன்.

என் மீது வீண் பழி சுமத்தி அவமானப்படுத்தியதற்காகவும், வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காகவும் திருப்பதி தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பக்தர் தனது புகாரில் கூறியிருப்பதாகவும், இதுகுறித்து திருப்பதி தேவஸ் தானத்திடம் விதர்பா போலீஸார் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x