மேற்குவங்கத்தில் அமைச்சரின் ஷூவுக்கு லேஸ் கட்டிவிட்ட போலீஸ்காரர்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

மேற்குவங்கத்தில் அமைச்சரின் ஷூவுக்கு லேஸ் கட்டிவிட்ட போலீஸ்காரர்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
Updated on
1 min read

மேற்குவங்கத்தில் அமைச்சரின் ஷூவுக்கு அவரது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் லேஸ் கட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ராச்பால் சிங். மேற்கு வங்கத்தின் பிரபல சிற்பியும் ஓவியக் கலைஞருமான மறைந்த ராம்கின்கர் பெய்ஜ் பிறந்த நாள் விழா தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க அமைச்சர் ராச்பால் சிங் வந்தார். ராம்கின்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு முன்னர் வெளி யில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார் ராச்பால்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் வெளியில் வந்த ராச்பால், தனது ஷூவை காலில் அணிந்து கொண்டார். அப்போது, அவருடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் ஓடி சென்று, கீழே குனிந்து அமைச்சரின் ஷூவில் லேஸ் கட்டி விட்டார். தனது ஷூவில் லேஸ் கட்டிவிட சொல்லி அமைச்சரே உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டார்.

இதையடுத்து, அமைச்சருக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் எளிமையாக நடந்து கொள்பவர். அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர், தனது ஷூவுக்கு போலீஸ்காரர் லேஸ் கட்டி விடுவதை எப்படி அனுமதித்தார் என்று விமர்சிக்கின்றனர். இதனால் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in