Published : 05 May 2015 06:49 PM
Last Updated : 05 May 2015 06:49 PM
நாடு முழுவதும் 101 நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறைந்த செலவிலான போக்குவரத்து வசதியை அளிப்பதும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 5 தேசிய நீர்வழிப் பாதைகளுடன் தற்போது மேலும் 101 நீர்வழிப் பாதைகள் இணையவுள்ளன.
தேசிய நீர்வழிப் பாதை மசோதா, 2015 – என்ற பெயரிலான இந்த மசோதாவை சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “நாடு முழுவதிலும் உள்ள உள்நாட்டு நீர்வழித் தடங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதே இந்த மசோதாவின் நோக்கம். நாட்டில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை காட்டிலும் நீர்வழிப் போக்குவரத்து பின்தங்கியுள்ளது.
சாலை, ரயில் போக்குவரத்தை காட்டிலும் இது குறைந்த செலவிலான போக்குவரத்து என்பதால் நீர்வழித் தடங்களை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமை பணியாக உள்ளது.
நீர்வழிப் போக்குவரத்து செலவு கி.மீட்டருக்கு 50 காசுகளாக உள்ளது. இதுவே சாலைப் போக்குவரத்தில் ரூ.1 ஆகவும் ரயில் போக்குவரத்தில் ரூ.1.50 ஆகவும் உள்ளது. நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் சாலைகளில் நெரிசலை குறைப்பதே அரசின் நோக்கம்.
ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் என நாடு முழதுவம் 14,500 கி.மீ. தொலைவுக்கு உள்நாட்டு நீர்வழிப் பாதை உள்ளது. என்றாலும் இவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதுடன் உலர் மற்றும் துணை துறைமுகங்கள் ஏற்படுத்துவது மற்றும் ‘பிரதமர் ஜல் மார்க் யோஜனா’ திட்டத்தை செயல்படுத்து என மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட நீர்வழிப் பாதைகளில் 2016-17-ல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT