Last Updated : 11 May, 2015 05:49 PM

 

Published : 11 May 2015 05:49 PM
Last Updated : 11 May 2015 05:49 PM

சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு தடை

சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தேர்வுக் குழு ஏப்ரல் 15 முதல் 21 வரை சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான நேர்காணல் நடத்துவதாக இருந்தது.

இதனை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து உத்தரவு பிறப்பித்தார். தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், சுதாகர், ஹரிபரந்தாமன் ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெற தகுதியில்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி கர்ணனின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு தடைவிதித்து உத்தரவிட்டது.

அதன்பிறகும் இந்த வழக்கை தானே விசாரிக்க பட்டியலிடும்படி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தை நீதிபதி கர்ணன் அறிவுறுத்தினார். அதன்படி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வழக்கை விசாரித்த அவர், தனது நீதிமன்ற பணிகளில் குறுக்கிட்டால் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத் தலைவருக்கு இந்த நீதிமன்றம் அறிவுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதாபா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x