

நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை காணப்படுகிறது. சிவப்பு நாடா என்று சொல்லப்படும் அதிகாரிகள் நிர்வாக கெடுபிடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாராட்டி இருக்கிறார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையது. குஜராத் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிடும்போது அவர் கூறியதாவது:
குஜராத்தை ஒரு உதாரணமாக மாற்றிக்காட்டி யவர் மோடி. பஞ்சாயத்து நடைமுறைகளை அறிந்துகொள்வதற்காக அதிகாரிகளை குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி இருக்கிறேன். நிர்வாக நடைமுறைகள் வெளிப்படையாகவும் ஊழலுக்கு வழி செய்யாமலும் நிர்வாக நடைமுறைகெடுபிடி இல்லாமலும் இருந்தால் அந்த அமைப்பு சிறப்பாக செயல்படும்.
எனினும் நரேந்திர மோடியின் மேம்பாட்டு திட்ட முழக்கங்களை நிறைவேற்றுவது நீண்டகால பந்தயமாகவே இருக்கும்.
இந்தியா மிகப்பெரிய நாடு. பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம். குஜராத் முதல்வராக மக்கள் அவரை பலமுறை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி வட துருவமும் தென்துருவமும் சந்திப்பது போன்றதாகும் என்றார் முப்தி.
முப்தி முகம்மதுவுடன் மாநில நிதி அமைச்சர் ஹசீப் திரபு, கல்வித்துறை இணை அமைச்சர் பிரியா சேத்தி, மூத்த அதிகாரிகள் வந்துள்ளனர்.