Published : 29 May 2015 04:06 PM
Last Updated : 29 May 2015 04:06 PM

கைது செய்யப்பட்ட 17-வயது மும்பை இளைஞர் மரணம்; சித்ரவதை காரணமா? - விசாரணைக்கு உத்தரவு

மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட 17 வயது இளைஞர் அமீர் ஜமால் கான், மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தின் பின்னணியில் சித்ரவதை காரணமாக இருக்கலாம் என்று ஐயம் எழுந்துள்ளது.

மும்பை புறநகர் பகுதியான போவாயைச் சேர்ந்த 17-வயதான அமீர் ஜமால் கான், ஏப்ரல் மாதம் 17-ம் தேதி, பெண்ணிடமிருந்து பர்ஸை திருடியதற்காக கைது செய்யப்பட்டு, தோங்ரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கு சிலநாட்கள் இருந்த பிறகு மாதுங்காவில் உள்ள டேவிட் சஸூன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சீர்திருத்தப் பள்ளியிலிருந்து மருத்துவமனையில் அமீர் ஜமால் கான் சேர்க்கப்பட்ட போது அவரது உடலில் பயங்கர காயங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து நாயர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜமால் கான் வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை மறுத்த மகாராஷ்டிர மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை, சம்பவம் குறித்த விவரங்களைக் கோரியுள்ளது.

இது குறித்து சிவாஜி பார்க் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் கூறும்போது, மும்பை போலீஸ் சிறுவனிடமிருந்து வாக்குமூலம் பெற்றதாகவும், அதில் டேவிட் சஸூன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த சக கைதிகள் மற்றும் மூத்த அதிகாரி ஒருவர் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை சித்ரவதை செய்து, அடித்து தாக்கியதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து அந்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் 12 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிறை வார்டன் கஜானன் பகாரே என்பவரும் அடங்குவார்.

குழந்தைகள் நல கமிட்டியிடமிருந்து அனுமதி பெற்று அமீர் ஜமால் கானிடமிருந்து வாக்குமூலம் சேகரித்துள்ளனர் காவல் துறையினர்.

மேலும், ஜமால் கானின் மரணத்திற்குக் காரணமான காயங்கள் பற்றிய விவரங்களையும் நாயர் மருத்துவமனையிலிருந்து போலீஸ் கோரியுள்ளது. நெஞ்செலும்பில் முறிவும், மார்பில் ரத்தக்கட்டும் ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மற்றொரு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தாக்கப்பட்ட பிறகு 2 நாட்கள் சிறுவனுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணை தெரிவிப்பதாக சிவாஜி பார்க் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, மகாராஷ்டிர மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வித்யா தாக்கூர் இது பற்றி கூறும்போது, "எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, அமீர் ஜமால் கான் ஏப்ரல் 20ம் தேதி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார், மே 20ம் தேதி அமீர் ஜமால் கான் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கு பிறகே சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

மேலும் விசாரணைக்கு பிறகு உண்மை வெளிப்படும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x