Published : 06 Mar 2014 04:29 PM
Last Updated : 06 Mar 2014 04:29 PM

என்னிடமே பிரதமர் பதவிக்கான தகுதிகள் அதிகம்: நிதிஷ்

தற்போது பிரதமர் பதவிக்காக வலம் வருபவர்களைவிட தன்னிடமே அப்பதவிக்கான தகுதிகள் மிகுதியாக உள்ளது என பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் கூறினார்.

பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று நிதிஷ் குமார் 'சங்கல்ப் யாத்திரை' மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "பிரதமர் பதவிக்காக வலம் வருபவர்களைவிட, நான் அதிக தகுதிகளைக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையோ, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையோ குறிப்பிட்டு பேசாமல், அவர்களை முன்வைத்தே இவ்வாறு பேசினார்.

மேலும் அவர் கூறும்போது, "ஒருவருக்கு நாடாளுமன்றத்தைப் பற்றி எந்த அனுபவமும் இல்லை, இன்னொருவருக்கு மாநிலத்தில் ஆட்சி செலுத்துவது எப்படி என்பது தெரியாது. ஆனால் நாடாளுமன்ற அரசியல் அனுபமும், ஆட்சி செலுத்தும் அனுபவமும் எனக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவிக்கு எனக்கே முழு தகுதியும் இருக்கிறது" என்றார் நிதிஷ் குமார்.

அதேவேளையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், "ஐக்கிய ஜனதா தள கட்சியின் முதன்மை இலக்கு மக்களுக்கு சேவை செய்வதே ஆகும்.

இருப்பினும், ஒவ்வொரு கட்சிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கும். அந்த வகையில், ஐக்கிய ஜனதா தள கட்சியும் முயற்சிப்பதில் தவறு என்ன இருக்கிறது" என்றார் நிதிஷ் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x