Last Updated : 22 Apr, 2015 08:07 AM

 

Published : 22 Apr 2015 08:07 AM
Last Updated : 22 Apr 2015 08:07 AM

மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்படுகிறார்: நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி மதன் பி. லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லும்’ என்றும் நீதிபதி பானுமதி ‘செல்லாது’ என்றும் தீர்ப்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்திஅர்ஜுனா ஆஜரானார். அவர் வாதாடிய போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் ஆஜரானார். அவர் கூறியபோது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லும், அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.

மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x