Last Updated : 16 Apr, 2015 11:31 AM

 

Published : 16 Apr 2015 11:31 AM
Last Updated : 16 Apr 2015 11:31 AM

திருப்பதி துப்பாக்கிச் சூடு: ஆந்திர போலீஸார் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்கு பதிவு

திருப்பதி என்கவுன்ட்டரில் ஈடுபட்ட போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மீது ஆந்திர மாநிலம் சந்திரகிரி போலீஸார் கொலை, ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

என்கவுன்ட்டர் நடந்த பகுதி சந்திரகிரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் குடும்பத்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது போலி என்கவுன்ட்டர் என்றும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து சந்திரகிரி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

குறிப்பாக திருவண்ணாமலை வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் மனைவி எஸ்.முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டரில் ஈடுபட்ட போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 34, சட்டப்பிரிவு 364 (கொலைக்காக கடத்தல்), சட்டப்பிரிவு 302 (கொலை) ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x