

பிஹார் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறித்து ஊடகங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். அவரை நான் பதவி விலகச் சொல்லவில்லை. மக்கள் அவரை நிராகரித்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அதன் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தோல்விக்கு நிதிஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
பிஹார் அரசியலில் இப்போதுவரை எதுவும் தெளிவாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் எதையும் கூற முடியாது.
மாநிலத்தின் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் மாநில அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு லாலு பிரசாத் தெரிவித்தார்.