Published : 24 May 2014 02:57 PM
Last Updated : 24 May 2014 02:57 PM
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அதன் முக்கியத் தலைவர்களான ஷாஜியா இல்மி மற்றும் 'ஏர் டெக்கான்' விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத் ஆகியோர் சனிக்கிழமை திடீரென விலகினர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ஷாஜியா கூறுகையில், ‘‘ஒரு சிறிய குழு கேஜ்ரிவாலை சூழ்ந்து கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. 'ஸ்வராஜ்' பற்றி பேசும் இந்தக் கட்சியிலேயே சுதந்திரத்தைப் பின்பற்ற முடியாத நிலை உள்ளது’’ என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷாஜியா, டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் கட்சிக்கு நிதி திரட்டும் பெயரில் பணம் வசூலித்ததாக சர்ச்சை கிளம்பியதால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.
பிறகு ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட கட்சி விரும்பியபோது மறுத்து விட்டார். பிறகு உ.பி.யின் காஜியாபாத்தில் பாஜக வேட்பாளர் வி.கே.சிங்கை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
சீட் தராததால் அதிருப்தி
பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத் 'ஏர் டெக்கான்' நிறுவனத்தை தொடங்கியவர். கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். மேலும் அக்கட்சியின் சார்பாக மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் தேர்தல் சமயத்தில்கூட பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், கோபிநாத் சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து திடீரென விலகினார்.
யோகேந்திர யாதவுக்கு பதிலடி
கட்சியிலிருந்து கேப்டன் கோபிநாத் விலகியது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறும்போது, 'கேப்டன் கோபிநாத் எப்போது ஆம் ஆத்மியில் இணைந்தார்? இப்போது விலகுவதற்கு?' என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து கோபிநாத் கூறுகையில், “நான் ஆம் ஆத்மியில் இணைந்தது உலகம் அறிந்த செய்தி. அதைக்கூட அறியாதவர் அரசியல் ஆய்வாளர் அல்ல. எப்போதும் தூங்கி வழியும் அரசியல் விலங்கு. தேர்தலில் ஆம் ஆத்மி பாதாளத்திற்கு போகப்போகிறது என்று தெரியாத ஒருவர் பெரிய அரசியல் கணிப்பாளராக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது'' என பதிலடி கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT