

ஆந்திராவில் தமிழர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தினார்.
திருப்பதி துப்பாக்கிச் சூடு குறித்து மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. வேணுகோபால், இச்சம்பவத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுக மக்களவை குழு தலைவர் வேணுகோபால் நோட்டீஸ் அளித்தார்.
ஆனால், பிரச்சினை மாநில அரசு சம்பந்தப்பட்டது எனக் கூறி ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். அதேவேளையில், பிரச்சினை குறித்து அவையில் பேச அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய அதிமுக எம்.பி.வேணுகோபால், "ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக அதிரடிப் படையினர் போலீஸ் கூட்டு என்கவுன்ட்டரில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது வெட்டுக்காயங்களும் உள்ளன. ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். என்கவுன்ட்டரில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்தார்" என்றார்.