Published : 03 Apr 2015 02:56 PM
Last Updated : 03 Apr 2015 02:56 PM

நிலச் சட்ட எதிர்ப்பு: ஏப்.22-ல் கேஜ்ரிவால் தலைமையில் பேரணி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி பேரணி நடைபெறுகிறது.

அர்விந்த் கேஜ்ரிவால் 2-வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றப் பின்னர் அவர் தலைமையில் நடைபெறவுள்ள முதல் போராட்டப் பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஏப்ரல் 22-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தலைமையில் பேரணி நடைபெறும்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும். பேரணி பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் உரையாற்றுவார்" என கூறியுள்ளார்.

கடந்த 28-ம் தேதி டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூட்டத்தில், நிலச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரணியை ஒருங்கிணைக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

அந்தக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகளின்படி தற்போது வரும் 22-ம் தேதி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச் சட்டம்:

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது. மத்தியில் ஆட்சி மாறிய நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ம் தேதி இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இந்த அவசர சட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம், ஏழை விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்றும், தொழில் அதிபர்களுக்கு ஆதரவானது என்றும் இச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அண்மையில், இச்சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும் பேரணி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x