Last Updated : 11 Apr, 2015 12:08 PM

 

Published : 11 Apr 2015 12:08 PM
Last Updated : 11 Apr 2015 12:08 PM

பிரான்ஸிடம் இருந்து 36 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா: பாரீஸில் மோடி உறுதி

விமானப் படையின் தேவையைப் பூர்த்தி செய்ய பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே 2007-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, ரூ.79,000 கோடி மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளிடையே கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் விலை நிர்ணயம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.

இந்நிலையில், பிரான்ஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அந்நாட்டு அதிபர் பிரான்ஸாய் ஹலாந்தை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, தொழில்துறை, விண்வெளி ஆராய்ச்சி, சமூகக் கட்டமைப்பு, கல்வி, சுற்றுலா மேம்பாடு, இளைஞர்கள் திறன் மேம்பாடு என பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் ஹலாந்தேயும் இரவு கூட்டாக இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்திய கடற்படையின் முக்கியத் தேவையை கருத்தில் கொண்டு, தற்போது இயங்கும் நிலையில் உள்ள 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சுமூகமான பேச்சு இருந்தது. அத்துடன் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோத்பூர் அணு உலைத் திட்டமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜோத்ப்பூரில் 6 அணு உலைகளை பிரான்ஸின் அரீவா நிறுவனம் அமைக்கும்" என்றார் மோடி.

குறிப்பிடத்தகும் வகையில் இந்தியா - பிரான்ஸின் கூட்டுத் தயாரிப்பிலான செயற்கைக்கோளிடமிருந்து தகவல்களைப் பெறுதல், பொருளாதாரத் துறை மேம்பாடு, தகவல் பரிமாற்றம், ஆயுர்வேத மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுக்கான முக்கிய 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அதன் விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x