

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் தாராகிரி போர்க் கப்பலுடன் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்மூழ்கி கப்பலும் கடற்படையில் நேற்று சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் அரிதாமன் நீர்மூழ்கி கப்பல் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த நீர்மூழ்கி கப்பலில் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் செல்லும். இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் நீர்மூழ்கி கப்பல்களை விட, இந்த கப்பல் 2 மடங்கு சக்தி வாய்ந்தது. இதில் ஏவுகணைகள் ஏவுவதற்கு 8 ட்யூப்கள் உள்ளன.
இந்த கப்பலில் உள்ள அணு ஏவுகணை கடலுக்கடியிலிருந்து வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது. அரிதாமன் கப்பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவுகணைகள் உள்ளன. இவை 750 கிலோ மீட்டர் முதல் 1,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும்.