Published : 03 Apr 2015 11:41 AM
Last Updated : 03 Apr 2015 11:41 AM

கோவாவில் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த வழக்கு: அமைச்சருக்கு தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் - முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்

அரசு அதிகாரியின் கன்னத்தில் அறைந்த வழக்கில், கோவா அமைச்சருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதையடுத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ‘கோவா விகாஸ் கட்சி’ சார்பில், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பிரான்சிஸ்கோ மிக்கி பச்சிகோ பதவி வகித்தார். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரானதால், கோவா அமைச்சரவையில் பிரான்சிஸ்கோ சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, கோவா மின்துறையில் இளநிலை பொறியா ளராகப் பணியாற்றிய கபில் நடேகர், அமைச்சர் பிரான்சிஸ்கோவுக்கு எதிரா கப் போலீஸில் புகார் அளித்தார். அதில், ‘‘அமைச்சர் தன்னுடைய அறைக்கு என்னை வரவழைத்து தரக்குறைவா கப் பேசினார். என் கன்னத்தில் அறைந்தார்’’ என்று குற்றம் சாட்டியிருந் தார். இதையடுத்து பிரான்சிஸ்கோ மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இளநிலை பொறியாளர் கபில் நடேகரின் அலுவலகத்துக்கு அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்துள்ளனர். ஆனால், தொலைபேசியை எடுக்காத தால் அமைச்சர் கோபம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த மர்ம கோவா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அமைச்சர் பிரான்சிஸ்கோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்ற கோவா அமர்வில், அமைச்சர் மேல்முறை யீடு செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தண்டனையை 6 மாதமாகக் குறைத்து தீர்ப்பளித்தது. மேலும், அபராதத் தொகையை ரூ.1,500 ஆக குறைத்தது. மேலும் 2 வாரங்களுக்குள் போலீஸில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரான்சிஸ்கோ மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எப்.எம்.ஐ. கலிபுல்லா, சிவகீர்த்தி சிங் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, போலீஸில் சரணடைவதில் இருந்து கடந்த ஆண்டு பிரான்சிஸ் கோவுக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை முடிந்த நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், பிரான்சிஸ்கோவின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவின்படி அவர் 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்சிஸ்கோ கூறும்போது, ‘‘பாஜக தலைமையிலான ஆட்சிக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ராஜினாமா கடிதத்தை முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க முதல்வர் லட்சுமிகாந்த் சென்றுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அமைச்சர் பிரான்சிஸ்கோவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆளுநருக்கு அவருடைய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தது.

இளம்பெண் தற்கொலை வழக்கில் ஏற்கெனவே பதவியை இழந்தவர்

பிரான்சிஸ்கோ தனது அமைச்சர் பதவியை இழப்பது இது 2-வது முறை. கடந்த 2010-ம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார் பிரான்சிஸ்கோ. அப்போது இவரது 28- வயது தோழி நதியா டொராடோ சென்னையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பிரான்சிஸ்கோ மீது குற்றம் சாட்டப் பட்டது. தலைமறைவான பிரான்சிஸ்கோவை ஒரு மாதம் கழித்து போலீஸார் கைது செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த பிரான்சிஸ்கோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நதியாவின் தற்கொலையில் பிரான்சிஸ்கோவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கு சமீபத்தில்தான் முடித்து வைக்கப்பட்டது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x