Published : 06 Apr 2015 08:38 AM
Last Updated : 06 Apr 2015 08:38 AM

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயற்சி

காஷ்மீர் லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி மேற் கொண்டனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர்.

அருணாசல பிரதேச மாநிலத் தின் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த எல்லைப் பகுதிகளில் சீன அரசு சாலை, ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. இதற்குப் பதிலடியாக மத்திய அரசும் எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2013 ஏப்ரலில் காஷ்மீரின் லடாக் பகுதி யில் ஊடுருவிய சீன ராணுவ வீரர் கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கி னர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்தது. சுமார் 3 வாரங்கள் இந்த பதற்றம் நீடித்தது. அப்போது மத்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாக சீன ராணுவ வீரர்கள் தங்கள் எல்லைக்குத் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2014 செப்டம்பரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தந்தபோது லடாக் பகுதி யில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவினர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை எல்லைக் கோட்டில் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு வார பதற்றத்துக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

கடந்த மார்ச் 20-ம் தேதி லடாக்கின் பர்ஸ்டி, தேப்சங் பகுதிகளில் சீன வீரர்கள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களின் முயற்சியை இந்திய வீரர்கள் வெற்றி கரமாக முறியடித்து பின்வாங்கச் செய்துள்ளனர். மீண்டும் மார்ச் 28-ம் தேதி இதே பகுதிகளில் சீன வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். இந்திய வீரர்கள் அரண் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோடி சீனா பயணம்

வரும் மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது சீன ஊடுருவல் குறித்து பிரதமர் கடும் அழுத்தம் அளிக்க வேண்டும் என்று உள்துறை, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x