Last Updated : 22 Apr, 2015 04:50 PM

 

Published : 22 Apr 2015 04:50 PM
Last Updated : 22 Apr 2015 04:50 PM

நிலச் சட்ட எதிர்ப்பு: ஆஆக பேரணியில் விவசாயி தற்கொலை

புதுடெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான பேரணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பலர் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசாவைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற அந்த விவசாயி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியதாக குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் விவசாயம் தோல்வியடைந்ததால் தனது தந்தை வீட்டை விட்டு துரத்தியதால் மனமுடைந்து இந்த தீவிர முடிவுக்கு வந்ததாக அந்த தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,

மரத்தில் அவர் தூக்கிட்டுக் கொள்ளும் போது மரத்தின் கீழே இருந்தவர்கள் வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் யாருடைய பேச்சுக்கும் செவிசாய்க்க மறுத்த கஜேந்திர சிங் கழுத்தில் துணி இறுக்க கீழே தொங்கினார். மரக்கிளை முறிந்து அவர் தரையில் பயங்கரமாக விழுந்ததாகக் கூறப்படுகிற்து.

உடனடியாக இவரை ராம் மனோஹர் லோகியா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. கஜேந்திர சிங்குக்கு 3 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி தொண்டர்கள் மரத்தின் மீது ஏறி அவரது உடலை தரையில் இறக்கிய போதே அவருக்கு மூச்சு நின்று போயிருந்தது.

பேரணியில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இருந்த போதே இந்தத் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு சுமார் 1 மணி நேரம் முன்னதாகவே அவர் மரத்தின் மீது ஏறியதாக ஆம் ஆத்மி தொண்டர்கள் தெரிவித்தனர்.

டெல்லி துணை முதல்வர் சிசோடியா இதுபற்றி கூறும் போது, “ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்கென்றே செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசின் சதிக்கு டெல்லி போலீஸ் துணை போயுள்ளது. அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள், ஆனால், கடவுளுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்” என்று ஆவேசப்பட்டுள்ளார்.

போலீஸ் அவரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று ஆம் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங், மற்றும் குமார் விஸ்வாஸ் சாடியுள்ளனர்.

விசாரணைக்கு ராஜ்நாத் உத்தரவு

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி காவல் ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸியிடம் அவர் பேசி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம்

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தான் மிகவும் உடைந்து போயுள்ளதாக பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கஜேந்திராவின் மரணம் தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் இதனால் மிகவும் உடைந்து போயுள்ளோம், வருத்தமடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கடின உழைபாளியான விவசாயி எந்த ஒரு தருணத்திலும் தனித்து விடப்பட்டதாக கருதக்கூடாது. இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் நாமனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x