

மேற்கு வங்கத்தில் சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் பர்தமன் கட்வா சாலையில், பர்தமனில் இருந்து 2 கி.மீ. தொலைவில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.2 பஸ்களை முந்திச்செல்ல முயன்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் கவிழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 70 பேர் இருந்தனர். குத்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், நாடியா மாவட்டம், மாயாப்பூர் என்ற இடத்துக்கு செல்லும்போது விபத்தில் சிக்கினர்.
மருத்துவமனைக்கு 10 பேர் சடலமாகக் கொண்டு வரப்பட்டதாகவும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இறந்தவர்களில் இருவர் குழந்தைகள் ஆவர்.
விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் ஸ்வபன் தேப்நாத் பார்வையிட்டார். தலைமறைவான பஸ் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.