ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்க இந்தியா துணை நிற்கும்: மோடி

ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்க இந்தியா துணை நிற்கும்: மோடி
Updated on
2 min read

"ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்கவும், அவர்களைக் கைப்பிடித்து கரை சேர்க்கவும், துணை நிற்கவும் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என்றார் மோடி.

அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "இன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்ய, எனது மனம் இடம் கொடுக்கவில்லை, கனக்கிறது, மனம் கவலையில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது, ஆலங்கட்டி மழை, பருவம் தப்பிப் பெய்யும் மழை, விவசாயிகளின் பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பிஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது, அதில் பலர் உயிரிழந்தார்கள், பெரும் இழப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது.

ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம். இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில மாநிலங்களின் பல பகுதிகளில் பலர் உயிரைக் குடித்திருக்கிறது. பலர் தங்கஙள உடைமைகளை இழந்துவிட்டனர். ஆனால், நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு பயங்கரமானது.

நான் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்தப் பேரழிவு எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நேபாளம் எப்படிப்பட்ட துயரத்தை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது, அவர்களின் குடும்பங்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்ற இவற்றையெல்லாம் என்னால் மனதில் எண்ணிப் பார்க்க முடிகிறது.

ஆனால், ஹிந்துஸ்தானம் உங்களின் சங்கட காலத்தில் உங்களுக்கு துணை நிற்கிறது. நேபாளத்திலும் சரி, இந்தியாவின் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பிற பகுதிகளிலும் சரி, உடனடி நிவாரணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான செயல் மீட்பு நடவடிக்கை. இப்போதும் கூட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் பல பேர்கள் உயிரோடு இருக்கலாம். அவர்களை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். வல்லுனர்களின் குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே, இந்தப் பணியில் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடித்துத் காட்டிக் கொடுக்கும். அதிக எண்ணிக்கையில் மக்களின் உயிரைக் காப்பதே எங்களது முழு முயற்சியாக இருக்கும்.

மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். மறுசீரமைப்புப் பணிகள் நீண்ட காலம் தொடரக் கூடும். ஆனால் மனிதத்துவத்துக்கென்று ஒரு ஆற்றல் இருக்கிறது. 125 கோடி இந்தியர்களுக்கும் நேபாளிகள் சொந்தக்காரர்கள். அவர்களது துயரம் நமது துயரம். இந்த துயரம் நிறைந்த வேளையில் ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்கவும், அவர்களைக் கைப்பிடித்து கரை சேர்க்கவும், துணை நிற்கவும் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

கடந்த நாட்களில் ஏமன் நாட்டில் நமது ஆயிரக்கணக்கான இந்திய சகோதர சகோதரிகள் சிக்கியிருந்தார்கள். போரின் கோர தாண்டவத்துக்கு இடையே, குண்டு மழைக்கு நடுவே, இந்தியர்களை மீட்பது, அதுவும் உயிரோடு மீட்பது என்பது ஒரு மகத்தான பணி மட்டுமல்ல, இடர்கள் நிறைந்ததும் கூட. ஆனால் இதை நம்மால் சாதிக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த போது, மனிதத்துவத்தின் ஆற்றல் வெளிப்பட்டது. குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது, மரணத்தின் கருமை கப்பிக் கிடக்கிறது, இந்த நிலையில் பிறந்த ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருப்பது மனதுக்கு நிறைவை அளிக்கிறது.

கடந்த நாட்களில் நான் அயல்நாடுகளில் எங்கு சென்றாலும், ஒரு விஷயத்துக்காக எனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன. அது, யேமன் நாட்டில் நாம் கிட்டத்தட்ட 48 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதற்காகத் தான். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், என பல நாட்டு குடிமக்களுக்கும் நாம் உதவி இருக்கிறோம். இதன் காரணமாக, பாரத கலாச்சாரத்தின் மாபெரும் குணமான சேவா பரமோ தர்ம, அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.

நமது வெளியுறவு அமைச்சகம், விமானப் படை, கடற்படை ஆகியன மிகவும் சாகசத்தோடும், பொறுப்புணர்வோடும், இந்தப் பணியை நிறைவேற்றி இருக்கும் இந்த நிலையில், இவர்களது இந்த மகத்தான சேவை இனி வரும் காலங்களில் மாறாத ஒரு முத்திரை பதிக்கும் என்று நான் நம்புகிறேன். எந்த ஒரு இழப்பும் ஏற்படாமல் அனைவரும் இதிலிருந்து பாதுகாப்பாக மீள முடிந்திருக்கிறது என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in