Published : 24 Apr 2015 09:00 AM
Last Updated : 24 Apr 2015 09:00 AM

திருப்பதி என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்தாதது ஏன்?- மனித உரிமை ஆணையம் கேள்வி

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை நீதி விசாரணை நடத்தாதது ஏன் என்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று ஆந்திர போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை செம்மரம் கடத்தியதாக ஆந்திர அதிரடி சிறப்புப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்த நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய தேசிய மனித உரிமை ஆணைய குழு, நேற்று முன்தினம் ஹைதராபாத் வந்தது.

ஹைதராபாத்தில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. முன்னதாக, திருப்பதி என்கவுன்ட்டர் குறித்த அறிக்கையை ஆந்திர போலீஸார் தேசிய மனித உரிமை ஆணைய குழுவிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை படித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நாட்டில் முன்பு எப்போதும் நடக்காத வகையில் அதிகமானவர்களை சுட்டுக் கொன்று என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏன் இதுவரை நீதி விசாரணை செய்யப்படவில்லை.

இது போன்ற என்கவுன்ட்டர் சம்பவங்களில் சாதாரண வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக விசாரணை நடத்துவது என்று எப்படி முடிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

இந்த என்கவுன்ட்டரில் போலீஸார் எத்தனை பேர் ஈடுபட்டனர். அவர்களின் விவரம், அவர்களுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சைகள் போன்ற அனைத்து தகவல்களை யும் வழங்க வேண்டும்.

என்கவுன்ட்டரின்போது பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கியில் பதிவான போலீஸாரின் பேச்சுகள், அவர்களின் செல்போன் எண்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட இடத்தை விரைவில் நேரில் ஆய்வு செய்ய இருக்கி றோம் எனவும் நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் ஆந்திர போலீஸாரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x