

பிஹாரில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.
கடந்த சனிக்கிழமையன்று, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.
அவரைத் தொடர்ந்து ஜித்தன் மாஞ்சி புதிய முதல்வரானார். இந்நிலையில், மாஞ்சி தலைமையிலான புதிய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தங்கள் கட்சிக்கு ராஷ்டிரீய ஜனதா தளம் ஆதரவு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு, காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.