

கேட்ச் பிடிக்கச் சென்று சக வீரருடன் மோதியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மாரடைப்பால் காலமான 20 வயது பெங்கால் கிரிக்கெட் வீரர் அங்கிட் கேஷ்ரிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “இவரது இழப்பின் மூலம் உற்சாகமான இளைஞரையும், கிரிக்கெட் நேயமிக்க ஒருவரையும் நாம் இழந்து விட்டோம். அகாலமான, துரதிர்ஷ்டவசமான மரணம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நான் உடைந்து போய்விட்டேன். ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. இளம் கிரிக்கெட் வீரர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பது சரியா என்பது எனக்கு தெரியவில்லை. நான் இவரைப் பார்க்க வந்திருக்கிறென்.” என்று கிழக்கு வங்க கிரிக்கெட் சங்கத்துக்கு அங்கிட் கேஷ்ரியின் உடல் கொண்டு வரப்பட்ட போது அவரைப் பார்வையிட வந்த மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிறகு அங்கிட்டின் பெற்றோரை அழைத்து தனது இரங்கலை தெரிவித்தார் மம்தா.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ளே ஆகியோரும் தங்கள் இரங்கலையும் வீரரின் பெற்றொருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.