Published : 29 Apr 2015 08:29 AM
Last Updated : 29 Apr 2015 08:29 AM

செம்மர கடத்தல் வழக்கில் 11 பேர் கைது: செம்மரம், வாகனங்கள் பறிமுதல்

செம்மர கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த சோமு ரவி எனும் கடத்தல்காரர் உட்பட 11 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து செம்மரங்கள், வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் என்கவுன்ட்டரை தொடர்ந்து சித்தூர் மாவட்ட போலீஸார் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சரவணன் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவரைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் சென்னையைச் சேர்ந்த சவுந்தர்ராஜனை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.22 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி அண்ணாசாலை சாஸ்திரி நகரைச் சேர்ந்த சோமு என்பவரின் மகன் சோமு ரவி (39) என்பவரை நேற்று திருப்பதி போலீஸார் கைது செய்தனர். இவருடன் இவரது கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ், பாலா, ராமநாதன், பாஸ்கர், திருப்பதி, ரேணிகுண்டா பகுதிகளைச் சேர்ந்த கண்ணய்யா, கணேஷ், விஜய குமார், பாலசுப்பிரமணியம், ரமேஷ், நாதமுனி உள்ளிட்ட 11 பேரை போலீஸார் ரேணிகுண்டா-கோடூரு சாலையில் தும்புரு தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 28 செம்மரங்களையும், பைக், கார் ஆகிய 2 வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் சோமுரவி மீது சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ரேணிகுண்டா, நகரி, சித்தூர், பீலேர் உட்பட 23 போலீஸ் நிலையங்களில் செம்மர கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில்கூட இவர் இதுவரை போலீஸில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

செம்மரங்களை கூலி ஆட்கள் மூலம் வெட்டி அதனை பல்வேறு வாகனங்களில் சென்னைக்கு கடத்துவார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் செம்மரக் கடத்தல் மூலம் பல கோடி சொத்து சேர்ந்து உல்லாச வாழ்க்கையையை அனுபவித்து வருவது தெரியவந்துள்ளது. ஆகையால் இவரது சொத்துக்களை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரை நேற்று திருப்பதி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதில் சோமுரவி மீது வனத்துறை தடுப்பு சட்டத்தின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை மட்டும் கடப்பா சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மற்றவர்களை 14 நாட்களுக்கு திருப்பதி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x