Last Updated : 15 Apr, 2015 08:13 AM

 

Published : 15 Apr 2015 08:13 AM
Last Updated : 15 Apr 2015 08:13 AM

ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நீடிப்பாரா?- முக்கிய முடிவுகள் இன்று வெளியாகிறது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு வழ‌க்கறிஞராக பவானிசிங் ஆஜராவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பை வெளியிடுகிறது.

இந்த தீர்ப்பு வெளியானதும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் அரசு வழ‌க்கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் நிய மனத்தில் குளறுபடி நடந்துள்ளது. இவ்வழக்கில் பவானிசிங் ஆஜரானது சட்டப்படி செல்லாது. எனவே அவரை நீக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் பவானிசிங் நியமனம் தொடர்பான மனுவில் தீர்ப்பு வெளியாகும் வரை கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனிடையே கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா சில நாட்களுக்கு முன்னர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பவானிசிங்கை நீக்கக்கோரும் திமுகவின் மனு மீது இன்று பிற்பகல் 1.05 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாவதால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் டெல்லி மற்றும் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

பவானிசிங் நியமனம் தொடர் பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அறிவிப்பார். ஏனென்றால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் வருகிற 18-ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்னதாக தீர்ப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x