Last Updated : 07 May, 2014 11:22 AM

 

Published : 07 May 2014 11:22 AM
Last Updated : 07 May 2014 11:22 AM

முல்லைப் பெரியாறு வழக்கு: தமிழகத்துக்கு பெரும் வெற்றி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவை 136 அடியாக குறைத்து கேரள அரசு நிறைவேற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதுடன், அதை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெறுகிறது. இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மீறும் வகையில், அதே ஆண்டு மார்ச் 18-ம் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்த தீர்ப்பு விவரம்:

மாநிலங்களிடையே உள்ள நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து விசாரித்து இந்த நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்த பின், அதை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது நீதி பரிபாலனத்தில் தலையிடும் செயல். கேரள அரசு 2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும். இந்த குழுவில் தமிழகம், கேரளம் சார்பில் தலா ஒருவர் உறுப்பினராக இருப்பர். இக்குழு கேரளத்தில் தன் அலுவலகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இக்குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.

புதிய அணை கட்டும் விஷயத் தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் சம்மதத் துடன் நடைபெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x