Last Updated : 27 Apr, 2015 11:04 AM

 

Published : 27 Apr 2015 11:04 AM
Last Updated : 27 Apr 2015 11:04 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கர்நாடக அரசு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என்றும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார்.

அவரது நியமனமே செல்லாது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மதன் லோகுர், பானுமதி ஆகிய இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை அளித்ததால், இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு விவரம்:

கர்நாடக அரசுக்கே அதிகாரம்

உச்ச நீதிமன்றத்தால் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஒரு வழக்கில், அந்த மாநில அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க முடியும். அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்தது செல்லாது. இது சட்டப்படி தவறான செயல். இந்த வழக்கில் விசாரணை அமைப்பு கர்நாடக அரசுதான்.

பவானி சிங் நியமனம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வழக்குடன் முடிந்து விட்டது. எனவே, புதிதாக அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டும். அவரது எழுத்துப்பூர்வ வாதத்தை கேட்டறிந்த பின், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.

புதிதாக அரசு வழக்கறிஞரை நியமித்து, மறு விசாரணை நடத்திய பின் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நீதிபதி மதன் லோகுரின் தீர்ப்பு ஏற்புடையதல்ல. ஏற்கெனவே தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்டுள்ளதால், மறு விசாரணை தேவையில்லை.

கர்நாடக அரசு 28-ம் தேதிக்குள்(நாளை) 50 பக்கங் களில் எழுத்துமூலம் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்பழகன் தரப்பும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு, அவரது வாதத்தை 90 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை பரிசீலித்த பின் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும்.

தீர்ப்பு வழங்கும் முன், இந்த வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் நீதிபதி குமாரசாமி முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். ஊழல் வழக்கின் ஆழத்தையும், அதன் தாக்கத்தையும் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும். பவானி சிங் இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள வாதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

அன்பழகன் வாதம் தாக்கல்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வாதத்தை தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்றே 81 பக்கங்கள் அடங்கிய வாதத்தை அவரது வழக்கறிஞர்கள் எழுத்துமூலம் சமர்ப்பித்தனர்.

கர்நாடக அரசு தரப்பிலும் எழுத்துமூலம் வாதத்தை தயாரிக்கும் பணிகள் நேற்றே துவங்கின. கர்நாடக அரசு தரப்பு வாதம் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x