Published : 11 Apr 2015 10:00 AM
Last Updated : 11 Apr 2015 10:00 AM

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம்: அமைச்சருக்கு திமுக பதில்

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

‘வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார். 94 சதவீத பணிகள் முடிந்துவிட்டன’ என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்து திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி நடத்திய போராட்டத்தில் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து 3 கேள்விகளை எழுப்பினார். அதற்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை. 2012 டிசம்பருக்குள் முடித்திருக்க வேண்டிய குடிநீர் திட்டத்தை 2015 ஜூன் மாதத்தில் முடிக்கப்போகிறோம் என்றுதான் கூறியுள்ளார்.

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி முடிக்காமல் அதிமுக அரசு தாமதம் செய்கிறது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மை. அவர் எப்போதும் ஆதாரத்துடன் பேசுபவர். வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்ட கொள்கை விளக்கக் குறிப்பையே ஆதாரமாக காட்டி பேசினார். இத்திட்டம் குறித்து அமைச்சர் வாதங்களை வைத்தால் திமுக சார்பில் நிலைமைகளை தெளிவு படுத்துகிறோம். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x