Last Updated : 07 Apr, 2015 02:47 PM

 

Published : 07 Apr 2015 02:47 PM
Last Updated : 07 Apr 2015 02:47 PM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடு: தீர்ப்பு வழங்க 15-ம் தேதி வரை தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது வரும் 15-ம் தேதி வரை தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு வழக் கறிஞராக பவானி சிங் ஆஜராகி வருகிறார். இதை எதிர்த்து திமுக பொதுச்செயலாள‌ர் அன்பழகன் உச்ச ‌நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், பானுமதி அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அரசு, ஜெயலலிதா மற்றும் அன்பழகன் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “மூன்று தரப்பு வாதமும் முடிந்து விட்டதா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் அந்தியார்ஜுனா, “பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை தீர்ப்பு வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் “இவ்வழக்கில் அனைத்துக்கட்ட விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது” என அறிவித்தனர்.

இந்நிலையில், “மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இவ்வழக்கின் விசாரணை நடை பெறும்” என நீதிமன்ற அலுவலர் மூலம் மூன்று தரப்பு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகள் திடீரென‌ தகவல் கொடுத்தனர்.

பிற்பகலில் அமர்வு தொடங்கியதும் அன்பழகனின் வழக்கறிஞர் அந்தியார்ஜுனா, “பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே இவ்வழக்கில் அவர் ஆஜரானது சட்டத்துக்கு எதிரானது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வரும் 15-ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் மனு மீது 15-ம் தேதியே தீர்ப்பு வழங்க‌ப்படும்” என உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக விசாரித்த போது, “திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் தங்களது மனுவை அவசர மனுவாக கருதி மீண்டும் விசாரித்து, முடிவை அறிவிக்க வேண்டும்” என நினைவூட் டல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவை பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதன் அடிப்படையி லேயே இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x