Last Updated : 16 Mar, 2015 12:56 PM

 

Published : 16 Mar 2015 12:56 PM
Last Updated : 16 Mar 2015 12:56 PM

ராகுல் வேவு பார்க்கப்படவில்லை: மாநிலங்களவையில் ஜேட்லி விளக்கம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேவு பார்க்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.

மாநிலங்களவையில் இன்று விளக்கம் அளித்து அவர் பேசும்போது, "காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேவு பார்க்கப்படவில்லை. நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.க்கள்) குறித்து அவ்வப்போது தகவல் திரட்டப்படும். சுமார், 526 முக்கியப் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்தான் ராகுல் காந்தி குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒன்றுமே இல்லாத விஷயத்தை மலையளவு பெரிதாக்குகிறது காங்கிரஸ். 1987-ம் ஆண்டும் முதல் இவ்வாறு வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல்களை திரட்டுவதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு தகவல் திரட்டப்படுகிறது.

வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல் திரட்டும் நடைமுறைகள் கடந்த 1999-ம் ஆண்டு திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட நடைமுறையின்படிடே முன்னாள் பிரதமர்கள் தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன.

இதே நடைமுறைப்படித்தான் கடந்த 2004, 2009, 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராவதற்கு முன்னர் 2001, 2007, 2008, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் அவர் குறித்த தகவல்கள் இந்த நடைமுறையின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டன.

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஸ், அகமது படேல் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல.

முக்கியப் பிரமுகர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான நடைமுறை. இதில் வேவு, உளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல் காந்தியின் ஷூ அளவு கேட்டது தொடர்பாக சர்ச்சை எழுப்பப்படுகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது ஷூ அளவு கொண்டே அவரது சடலத்தை அடையாளம் காண முடிந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், பாதுகாப்பு அமைப்புகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். அதில் நாம் தலையிடக்கூடாது" என்றார்.

காங்கிரஸ் கண்டனம்:

ராகுல் காந்தியை அரசியல் உளவு பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. ராகுலின் அலுவலகத்துக்கு போலீஸார் அத்துமீறி சென்று தேவை இல்லாத விவரங்களைக் கேட்டுள்ளனர். ராகுல் காந்தி கண்களின் நிறம் என்ன, அவர் எப்படி இருப்பார், அவர் என்ன மாதிரியான ஷூ அணிவார் என்றெல்லாம் விசாரித்துள்ளனர்.

மோடியை யும் பாஜக.வையும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பது குஜராத்தில் வழக்கம். குஜராத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அதே பாணியை இப்போது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களிடமும் மோடி அரசு பின்பற்றுகிறது. இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கிளப்புவோம். ராகுல் பற்றி போலீஸார் விசாரித்து சென்றது குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x