Last Updated : 14 Mar, 2015 08:58 PM

 

Published : 14 Mar 2015 08:58 PM
Last Updated : 14 Mar 2015 08:58 PM

ராகுல் காந்தி உளவு விவகாரம்: காங். குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

ராகுல் காந்தியை மத்திய அரசு உளவு பார்க்கிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.

ராகுல் காந்தி ஓய்வு என்ற பெயரில் திடீரென கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் என்ன பேசுவதென்று தெரியாமல் உளறி வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுதாங்சு திரிவேதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் மேலும் கூறியது:

ராகுல் குறித்து காவல் துறை சேகரித்த விவரங்கள் வழக்கமான நடைமுறை. இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் மூத்த தலைவர் அத்வானி, மூத்த எதிர்க்கட்சித் தலைவர் வீரப்பமொய்லி, நரேஷ் அகர்வால் உள்ளிட்டோரிடமும் இதேபோன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இப்போது இதனை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கி உள்ளது. தங்கள் கட்சி சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணத்தில் அவர்கள் இருப்பதையே இது காட்டுகிறது.

முன்பு காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது குஜராத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்துறை அமைச்சகத்தில் ஓர் அதிகாரியை நியமித்தார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உத்தி என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x