Published : 19 Mar 2015 09:41 AM
Last Updated : 19 Mar 2015 09:41 AM

சட்டப்பேரவையில் புகைப்படம் எடுத்த விவகாரம்: பேரவை நிபந்தனைகளை மீறியதாக ரோஜாவுக்கு நோட்டீஸ்

ஆந்திர சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா, சட்டப்பேரவையில் வெளி ஆட்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதாக நேற்று அரசு தலைமை கொறடா கால்வா ஸ்ரீநிவாசுலு, பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவித்து நோட்டீஸும் வழங்கினார். இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கும்படி ரோஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவை நிபந்தனைகளை மீறியதாக ரோஜாவுக்கு மூன்றாவது முறையாக நோட்டீஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரோஜாவின் கோபம்

சட்டப்பேரவையில் நேற்று ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் போலாவரம் அணைக்கட்டு விவகாரத்தில் கடும் வாக்கு வாதம் நடைபெற்றது. அப்போது விஜயவாடா மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும், தெலுங்கு தேச கட்சியின் மாநில செயலாளருமான போண்டா உமா மகேஸ்வர ராவ் இது குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது ரோஜா குறுக்கிட்டு பேசத் தொடங்கினார். இதனால் அவரது மைக் அணைக்கப்பட்டது. இதனால், ரோஜா ஆத்திரமடைந்தார். அப்போது போண்டா உமா மகேஸ்வர ராவ் ரோஜாவை “ஆன்ட்டி நான் பேசுவதை முதலில் கேளுங்கள்” என கூறினார். இதற்கு ரோஜா மிகவும் கோபமடைந்தார். எம்.எல்.ஏ உமா மகேஸ்வர ராவுக்கு 16 வயதா? அல்லது கல்லூரி மாணவரா? என்னை எப்படி அவர் `ஆன்ட்டி’ என்று கூறலாம். எதிர்க்கட்சியினர் பேசுவதை மக்கள் தெரிந்து கொள்ள கூடாது என அவை நிகழ்ச்சிகளை ஆளும் கட்சி வேண்டுமென்றே சரிவர ஒளிபரப்புவதில்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x