Last Updated : 23 Mar, 2015 08:44 AM

 

Published : 23 Mar 2015 08:44 AM
Last Updated : 23 Mar 2015 08:44 AM

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா சீனா பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்

எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தியா - சீனா இடையே டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் தனக்குதான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. பிரதமர் பதவியேற்ற பின்னர் அருணாச்சலப் பிரதேசத்துக்கு மோடி சென்று வந்தார். அதற்கு சீனா கடும் கண்டனமும் தெரிவித்தது. இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை முதல்முறை யாக நடைபெற உள்ளது. டெல்லியில் இன்று இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைத் தொடங்குகிறது.

இதில், இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சிறப்பு பிரதிநிதியுமான அஜித் தோவல், சீனா தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியிசியும் பங்கேற்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டுக்கு இடையில் சர்வதேச எல்லை கோடு எது என்பதை நிர்ணயிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வந்தார். அப்போது இரு நாட்டு எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அவருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் இப்போது இரு நாட்டுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி வரும் மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த மாதம் சீனா சென்று வந்தார். பின்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறும்போது, ‘‘சீனாவும் இந்தியாவும் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ளன. எல்லைப் பிரச்சினைகளுக்கு இறுதி முடிவு காண, இருதரப்பும் அதிகமாக செயல்பட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியா - சீனா இடையில் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, டெல்லி யில் 18-வது சுற்றுப் பேச்சு வார்த்தை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x