Last Updated : 12 Mar, 2015 09:37 AM

 

Published : 12 Mar 2015 09:37 AM
Last Updated : 12 Mar 2015 09:37 AM

இந்தியன் ஆயில் மேலாளர் கொலை வழக்கு: 6 பேர் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் ஆயில் மாபியாக்களுக்கு எதிராக செயல்பட்ட இந்தியன் ஆயில் நிறுவன விற்பனை மேலாளர் கொலையில் 6 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

ஐஐஎம் லக்னோ பட்டதாரியான மஞ்சுநாத் (27), இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசலில் விற்பனை நிலையங்கள் பெருமளவில் கலப்படம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

2005-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசலை மஞ்சுநாத் சோதனையிட்டபோது, அங்கு கலப்படம் நடைபெறுவதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த விற்பனை நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்ய அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் கார் ஒன்றில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. லக்கிம்பூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோனு மிட்டல் என்கிற பவன் குமார் உள்ளிட்டோர் மஞ்சுநாத்தை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ராகேஷ் ஆனந்த், விவேக் சர்மா, திவேஷ் அக்னி கோத்ரி, சிவ கேஷ் கிரி, ராஜேஷ் வர்மா உள்ளிட்டோர் இதர குற்ற வாளிகள்.

மரண தண்டனை

இதில் மோனு மிட்டல், அக்னிகோத்ரிக்கு விசாரணை நீதிமன்றம் 2007 மார்ச் மாதம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்த குற்றத்தை மிகமிக அபூர்வமானதாக வகைப்படுத்த முடியாது என்றது.

‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து நான் குற்றவாளி என உறுதி செய்து நீதிமன்றம் தவறு இழைத்ததுள்ளது’’ என்று மிட்டல் தெரிவித்திருந்தார். மிட்டல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று அதனை தள்ளுபடி செய்தது. 6 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

2 பேர் விடுதலை

இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஹரிஷ் மிஸ்ரா மற்றும் ராஜீவ் அவாஸ்தி என்ற இருவரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக கருத்து கூறிய மஞ்சுநாத்தின் சகோதரர் எஸ்.ராகவேந்திரா, ‘‘உயர் நீதிமன்றத்தில் முறைப்படி வாதிடப்பட்டது. எனது சகோதரர் கொலைக்கு இவர்களே காரணம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

'மஞ்சுநாத்' திரைப்படம்

மஞ்சுநாத் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் பல இடங்களில் எரிபொருள்களில் நடைபெறும் கலப்படம், முக்கியமாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணை முறைகேடாக விற்பனை நிலைய டீசலுடன் கலக்கப்படும் மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மஞ்சுநாத்’ ஹிந்தி திரைப்படம் 2014-ம் ஆண்டு வெளியிடப் பட்டது.

சத்தீப் ஏ.வர்மா எடுத்த இந்த திரைப்படத்தில் மஞ்சுநாத் தானே நடந்த சம்பவங்களைக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டிருக்கும். கதைப்படி மஞ்சுநாத் இறந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது காட்டப்பட்டிருக்காது.

ஆனால் எரிபொருளில் கலப்படம் செய்து ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிப்பவர்களுக்கு எதிரான மஞ்சுநாத் மேற்கொண்ட போராட்டம் வாழ்கிறதா அல்லது இறந்துவிட்டதாக என்று காட்டப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x