Published : 30 May 2014 03:58 PM
Last Updated : 30 May 2014 03:58 PM

தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம்: நெருக்குதலால் உ.பி. அரசு தீவிர நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் தலித் சகோதரிகள் இருவர், கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச அரசின் உத்தரவின்பேரில் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையை அம்மாநில போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

கத்ரா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது உடைய இரண்டு சிறுமிகள் இருவர், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திறந்தவெளிக்குச் சென்றனர். இவர்கள் இருவரும் உறவு முறையில் சகோதரிகள் ஆவர்.

நீண்ட நேரம் ஆகியிரும் இருவரும் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் விவரம் கிடைக்காததால், காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்து தரும்படி, போலீஸிடம் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீஸ் தரப்பு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இவ்விரு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் கழுத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் பெற்றோர்களால் கண்டறியப்பட்டது. இதைக் கண்டு ஊர் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் கத்ரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சிறுமிகளின் சடலத்தை வைத்து கிராம மக்கள் போராடியதை அடுத்து, அவர்களை சமாதானம் செய்த போலீஸார், சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர், தூக்கிலிடப்பட்டதால் இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளரான மான் சிங் சவுகான், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்குதல் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாதவ சமூகத்தைச் சேர்ந்த உர்வேஷ் யாதவ், பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய மூன்று சகோதரர்கள் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் மேலும் நால்வருக்கு தொடர்பு இருப்பதை போலீஸ் உறுதி செய்தது.

இதன் தொடர்ச்சியாக, சர்வேஷ் யாதவ், பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய மூவரை இதுவரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சர்வேஷ் யாதவ் என்பவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் நால்வரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்குதலைக் கொடுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தை உத்தரப் பிரதேச அரசு கவனத்துடன் கையாண்டு வருகிறது.

இவ்வழக்கில் அலட்சியம் காட்டிய மூன்று போலீசார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை, முதல்வர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உத்தரப் பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x