Published : 24 Mar 2015 09:10 AM
Last Updated : 24 Mar 2015 09:10 AM

அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு சலுகை மத்திய அரசு, சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

அரசியல் தலைவர்கள், அதிகாரி கள், பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசு, சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுநல வழக்குகளுக்கான மையம்(சிபிஐஎல்) அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில் கூறப் பட்டிருந்ததாவது:

பிரபல தொழில் நிறுவனமான எஸ்ஸார் குரூப், நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் வழங்கி ஆதாயம் தேடியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றபோது, எஸ்ஸார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி ரூயாவுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பலில் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், திக்விஜய் சிங், வேணிபிரசாத் வர்மா, பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எஸ்ஸார் நிறுவனத்தில் வேலை வாங்கியுள்ளனர். இதுபோல் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அந்நிறுவனத்தின் மூலம் ஆதாயம் அடைந்துள்ளனர். இதன்மூலம், ஏற்பட்டுள்ள தொடர்பை பயன்படுத்தி எஸ்ஸார் தொழில் நிறுவனம் ஆதாயம் அரசின் முடிவுகளில் ஆதாயம் அடைந்துள்ளது.

இந்த தகவல் எஸ்ஸார் நிறுவனத்தின் இ-மெயில் ஒன்றின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், குரியன் ஜோசப், ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐஎல் மையம் சார்பில் அதன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதிகள் இந்த தகவலை தெரிவித்தவர் பெயரை வெளியிடும்படி கேட்டனர். அதற்கு பிரசாந்த் பூஷண், `அவர் எஸ்ஸார் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். அவரது பெயரை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். இப்போதே அவரது வீட்டை போலீஸார் நோட்டமிட்டுச் சென்றுள்ளனர்’ என்று கூறினார். அவரது பெயரை மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து இம்மனு குறித்து மத்திய அரசு, சிபிஐ, எஸ்ஸார் நிறுவனம் தரப்பில் 6 வாரங்களில் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x