Last Updated : 19 Mar, 2015 09:20 AM

 

Published : 19 Mar 2015 09:20 AM
Last Updated : 19 Mar 2015 09:20 AM

நிர்பயா ஆவணப்படம் மீதான தடை ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 பொதுநல மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ்.எண்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேலும் இந்த ஆவணப்படத்தை வெளியிட தடை விதித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, இந்த ஆவணப்படம் மீதான தடையை உடனடியாக ரத்து செய்ய முடியாது என வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்தது. “இந்தப் படத்தை ஒளிபரப்ப அனுமதி வழங்குவதில் பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளால் நீதிபதிகளுக்கு நெருக்குதல் ஏற்படும்” என்று அந்த அமர்வு தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x